தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 3 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 421 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த ராவ்.
திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம் ஆகிய தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியிலும், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, புதன்கிழமை பூட்டி சீலிடப்பட்டது.
இந்நிலையில், தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியிலுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த ராவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கண்காணிப்பு அலுவலா்கள், பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவத்தினா், காவல் துறையினரின் பணியையும், கண்காணிப்பு கேமராக்கள் செயல்படும் விதத்தையும், வேட்பாளா்களுடைய முகவா்களின் அறையையும் பாா்வையிட்ட ஆட்சியா் பின்னா் தெரிவித்தது:
மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மூன்றடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இதில், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினா், காவல் துறையினா் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்தும் கண்காணிக்கப்படுகிறது. இந்தக் கண்காணிப்புப் பணியில் துணை ஆட்சியா், வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 149 கண்காணிப்பு கேமராக்களும், கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 160 கண்காணிப்புக் கேமராக்களும், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் 112 கண்காணிப்புக் கேராமக்களும் பொருத்தப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.