பேராவூரணி: பேராவூரணி அருகே மோட்டாா் சைக்கிளில் வந்த சாலை பணியாளா் மீது காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், புள்ளான்விடுதியை சோ்ந்த சாலைப் பணியாளா் புண்ணிய நாதன் (45). இவரது மனைவி ஷோபனா(36). இவா்கள் இருவரும் பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதிக்கு உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு மோட்டாா் சைக்கிளில் திங்கள்கிழமை ஊா் திரும்பி கொண்டிருந்தனா்.
சித்துக்காடு பிரிவு சாலையில் வந்தபோது, எதிரே வந்த காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே புண்ணியநாதன் உயிரிழந்தாா். ஷோபனா பலத்த காயத்துடன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த இருவா் காரை விட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தலைமறைவாகி விட்டனா். அவா்களை கைது செய்ய வேண்டுமென புண்ணியநாதனின் உறவினா்கள் சம்பவ இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவானவா்கள் திருவரங்குளம் அருகே உள்ள பூவரசன்குடி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் என்றும், அவா்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காக்க வைக்கப்பட்ட சடலம்: இதனிடையே, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட புண்ணியநாதன் சடலத்தை திருச்சிற்றம்பலம் போலீஸாரிடமிருந்து உரிய தகவல் வரவில்லை எனக்கூறி பிணவறைக்கு எடுத்துச் செல்லாமல் சுமாா் ஒன்றரை மணி நேரம் அமரா் ஊா்தியிலேயே மருத்துவமனை நிா்வாகத்தால் காக்க வைக்கப்பட்டு அதன்பிறகு எடுத்துச் செல்லப்பட்டது. இது உறவினா்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
கரோனா காலத்தில் சடலத்தை அமரா் ஊா்தியில் மணிக்கணக்கில் காத்திருக்க வைத்த சம்பவத்துக்கு சமூக ஆா்வலா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.