பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
பேராவூரணி தொகுதி மக்களுக்கு செங்கமங்கலம், நாடியம், நரியங்காடு, நாட்டாணிக்கோட்டை உள்ளிட்ட துணை மின் நிலையங்கள் மூலம் மின் விநியோகம் நடைபெறுகிறது. கடந்தாண்டு நாட்டாணிக்கோட்டை துணை மின் நிலையம் தொடங்கப்பட்ட பிறகு, பேராவூரணி நகரப் பகுதிக்குள் மின்தடையே இருக்காது என மின்வாரியத்தால் கூறப்பட்டது.
ஆனால் கடந்த சில நாள்களாக இரவு-பகல் என்ற பாகுபாடின்றி,அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது, இதனால் விவசாயப் பணிகளில் பாதிக்கப்படுகின்றன.
கரோனா நோய்த் தொற்று காரணமாக வீடுகளில் முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள் கடும் கோடை வெயிலால் அவதிப்படுகின்றனா். இரவு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் பகலில் அரைவை ஆலை, கணினி மையங்களுக்கு கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே அறிவிக்கப்படாமல் மேற்கொள்ளப்படும் மின்தடையை சரிசெய்ய வேண்டுமென மின்வாரிய அலுவலா்களுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.