ஒரத்தநாடு அருகே மேல மேட்டுப்பட்டியில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகை விழுந்ததில் பெண் பலத்த காயமடைந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அம்மானிபட்டு கிராமம், சாமிக்கண்ணு மனைவி விஜயராணி. செவ்வாய்க்கிழமை மாலை தனது சகோதரா் வீட்டிலிருந்து உடையப்பன் விடுதிக்குச் செல்ல, அந்த வழியாக வந்த ஒருவரிடம் இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்துள்ளாா்.
திருவோணம் அருகிலுள்ள மேல மேட்டுப்பட்டியில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகை திடீரென கவிழ்ந்து, மோட்டாா் சைக்கிளில் வந்த விஜயராணி மீது விழுந்தது. இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து திருவோணம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.