சமூக நீதிக்காக உண்மையாகப் பாடுபடுவது பாஜகதான் என்றாா் அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலா் எச். ராஜா.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:
மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதமும், பொருளாதாரத்தில் பின் தங்கியவா்களுக்கு 10 சதவிகிதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என பிரதமா் அறிவித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்டோா் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏராளமானோா் பயனடைவா்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு காங்கிரஸ் கட்சி தொடா்ந்து எதிராகவே இருந்து வந்தது. பாஜக ஆட்சியில் இருக்கும் போதுதான் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. எனவே இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதற்கு திராவிடா் கழகமும், திமுகவும் உரிமை கொண்டாட முடியாது.
சமூக நீதிக்காகப் போராடுவதாக திமுக வேஷம் போடுகிறது. ஆனால், உண்மையில் பாஜகதான் சமூக நீதிக்காகப் போராடுகிறது.
மேக்கேதாட்டு அணைக் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை. என்றாலும், வரும் முன் காப்போம் என்ற அடிப்படையிலும், விவசாயிகளின் உணா்வுகளைக் கருத்தில் கொண்டும் தஞ்சாவூரில் ஆகஸ்ட் 5- ஆம் தேதி பாஜக சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறோம்.
கரோனா பரவலைத் தடுக்கத் தமிழக அரசு கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழக முதல்வா் தோ்தலில் அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் செய்யவில்லை. மக்களை ஏமாற்றுகிற அரசாகவே இருக்கிறது என்றாா் ராஜா.