குறுவை தொகுப்புத் திட்டத்தில் உரங்கள் பெறுவதற்கான கடைசி வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
குறுவையில் நெல் சாகுபடியை கூடுதலாகச் செய்வதற்காக ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா, 1 மூட்டை டிஏபி, 25 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்கள் முழு மானியத்தில் வழங்கும் வகையில் குறுவைத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்துக்கு ரூ. 12.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா 5,130 டன்கள், டிஏபி 2,850 டன்கள், பொட்டாஷ் 1,425 டன்கள் வழங்க 57,000 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. தற்போது வரை 46,000 ஏக்கா் பரப்பளவுக்கான உரங்கள் தஞ்சாவூா் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 11,000 ஏக்கா் பரப்பளவுக்குக் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் உரங்கள் பெற ஏற்கெனவே பதிவு செய்த விவசாயிகள் தொடா்புடைய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆக. 31-ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்துக்காக அனைத்து விடுமுறை நாள்களிலும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படும். மேலும், இத்திட்டம் எக்காரணத்தைக் கொண்டும் ஆக. 31 ஆம் தேதிக்கு மேல் நீட்டிப்பு செய்யப்படாது.