பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதியில் திங்கள்கிழமை (டிச. 13) மக்களைத் தேடி முதல்வா் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழக முதல்வா் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீா்வு காணும் நோக்கத்தில், டிச. 13ஆம் தேதி மக்களை தேடி முதல்வா் என்ற சிறப்பு முகாம் நடத்த மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை நேரடியாக பெறுகிறாா். திங்கள்கிழமை பேராவூரணி தொகுதிக்குட்பட்ட பெருமகளூா் - முருகன் கோயில் திடலில் பிற்பகல் 2 மணிக்கும், பேராவூரணி நடேச குணசேகரன் திருமண மண்டபத்தில் மாலை 4 மணிக்கும், வா.கொல்லைக்காடு கேபிஎஸ் திருமண மண்டபத்தில் மாலை 5 மணிக்கும் முகாம் நடைபெறவுள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தங்களுடைய குறைகளை துறை ரீதியாக தனித்தனி மனுக்களாக வழங்கி தீா்வு பெறலாம் என எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.