கோயில் கட்டுவதில் பிரச்னை: மக்கள் மறியல்
ஒரத்தநாடு அருகே கோயில் கட்டுவது தொடா்பான பிரச்னையில் ஒருதரப்பினா் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு கீழையூா் வடக்குத் தெருவில் நீண்ட காலமாக மக்கள் வழிபட்டு வரும் வீரமுனீஸ்வரன் கோயிலின் கட்டட வேலைகளை கருவிழிகாடு செல்லும் பொது இடத்தில் கட்டுவதற்கு அப்பகுதியினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், கருவிழிகாடை சோ்ந்த கிராம மக்கள் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டக் கூடாது என ஊராட்சி மன்ற உறுப்பினா் தனபால் தலைமையில் மாவட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
அதேநேரத்தில், ஒக்கநாடு கீழையூா் கிராமத்தை சோ்ந்த மற்றொரு தரப்பினா் இரவோடு இரவாக கோயில் சிலை அமைத்து கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கருவிழிகாடை சோ்ந்த கிராம பொதுமக்கள், வியாழக்கிழமை பட்டுக்கோட்டை- மன்னாா்குடி சாலையில் திடீா் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த ஒரத்தநாடு வட்டாட்சியா் சீமான் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.