தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லாரி மோதியதில் மூன்று பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் அருகே கும்பகோணம் புறவழிச்சாலையில் கடகடப்பை பகுதியில் சாலை நடுத்திட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் 3 பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது இவர்கள் மீது பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் வழியாக கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மோதியது. பின்னர் இந்த லாரி மூவரும் அருகில் நிறுத்தி வைத்திருந்த கார் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் வல்லம் அருகே நாட்டாணியைச் சேர்ந்த பிரசாத் (41), மாரியம்மன் கோவில் அருகே மருங்கையைச் சேர்ந்த சந்திரசேகர் (32), வலங்கைமான் அருகே அரித்துவாரமங்கலம் பகுதி அவளிவநல்லூரைச் சேர்ந்த சுதாகர் (27) ஆகியோர் பலத்தக் காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தினர் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.