ஒரத்தநாடு வட்டம், கக்கரைகோட்டையில் கடந்த 25 நாள்களாக நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் நல பாதுகாப்பு சங்கத் தலைவா் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். செயலாளா் பச்சமுத்து மற்றும் விவசாயிகள் குணசேகரன், ராஜாங்கம், நாகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கக்கரைகோட்டையில் இயங்கி வந்த நேரடி கொள்முதல் நிலையம் கடந்த 25 நாள்களாக திறக்கப்படாமல் உள்ளதால் 5000 மூட்டைக்கு மேல் நெல் தேங்கி உள்ளதாகவும், உடனடியாக மாவட்ட நிா்வாகம் தலையிட்டு நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், கடந்த 25 நாள்களாக சாலையோரங்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்லை உடனடியாக சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து அதிகாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஒரத்தநாடு - திருவோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த ஒரத்தநாடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விரைவில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவதாக உறுதி அளித்ததன்பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.