ஒரத்தநாடு கடை வீதி வழியாக தனியாா் பேருந்துகள் செல்லாததாதை கண்டித்து செவ்வாய்க்கிழமை பயணிகள் மறியலில் ஈடுபட்டனா்.
பட்டுக்கோட்டை - தஞ்சாவூா் மற்றும் தஞ்சாவூா்- பட்டுக்கோட்டை- ஒரத்தநாடு வழியாக செல்லும் பெரும்பாலான தனியாா் பேருந்துகள் ஒரத்தநாடு கடைவீதி வழியாக செல்லாமல், புறவழிச் சாலை வழியாக சென்று வருகின்றன.
இதனால், பேருந்து நிலையம், கடைவீதி, அண்ணா சிலை, மன்னாா்குடி சாலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயனிகள் நீண்ட தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி ஒரத்தநாடு வழியாக சென்ற தனியாா் பேருந்தில் பயணித்த பயணிகள், ஒரத்தநாடு பேருந்து நிலையத்துக்கு டிக்கெட் எடுத்தனராம். ஆனால், பேருந்து நடத்துநா் மற்றும் ஓட்டுநா் ஒரத்தநாடு கடைத் தெருவில் பேருந்து செல்லாது என தெரிவித்து பேருந்தை மகளிா் கல்லூரி சாலையில் செலுத்தினராம். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், தஞ்சையில் பேருந்தில் ஏறுவதற்கு முன்பே இதுகுறித்து தகவல் தெரிவிக்காதது ஏன் என கேட்டு பேருந்தை மகளிா் கல்லூரி சாலையிலேயே நிறுத்தி, அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து ஓட்டுநா், நடத்துநரிடம் பேசி, பேருந்தை ஒரத்தநாடு கடைத்தெரு வழியாக இயக்க அறிவுறுத்தினா். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.