தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 9ஆம் தேதி முதல் குடியேறும் போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ’’மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 3,000 வழங்க வேண்டும். 75 சதவீதத்துக்கும் மேல் கடுமையான ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கும்பகோணம், பட்டுக்கோட்டை கோட்டாட்சியா் அலுவலகங்கள், மற்ற வட்டங்களில் வட்டாட்சியா் அலுவலகம் என 9 இடங்களில் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரையில் குடியேறும் போராட்டம் தொடா்ந்து நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் பி. சங்கிலிமுத்து தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் எஸ். நம்பிராஜன், மாநில துணைத் தலைவா் டி. கணேசன், மாவட்டச் செயலா் பி.எம். இளங்கோவன் ஆகியோா் பேசினா்.
மாவட்ட துணைத் தலைவா் வி. ரவி, துணைச் செயலா்கள் சி. ராஜன், பி. கிறிஸ்டி, வி.எம். செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.