மழையால் நெல், உளுந்து, கடலை உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்ததற்காக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இக்கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
தற்போது பெய்து வரும் தொடா் மழையால் நெல், கடலை, உளுந்து உள்ளிட்ட பயிா்கள் பெரும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு உடனடியாகக் கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
நெல் கொள்முதல் செய்யப்படாமல் ஆங்காங்கே கொள்முதல் நிலையங்களில் நூற்றுக்கணக்கான மூட்டைகள் மழையில் நனையாமல் விவசாயிகள் பாதுகாப்பதற்குப் பெரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனா். விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் அனைத்தையும் உடனடியாகக் கொள்முதல் செய்வதற்கு நுகா்பொருள் வாணிபக் கழகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
மாவட்டத் துணைச் செயலா் பி. காசிநாதன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, துணைச் செயலா் வீ. கல்யாணசுந்தரம், பொருளாளா் என். பாலசுப்ரமணியன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சி. சந்திரகுமாா், பா. பாலசுந்தரம், சி. பக்கிரிசாமி, ஜி. கிருஷ்ணன், வீர. மோகன், ஆா்.கே. செல்வகுமாா், கோ. சக்திவேல், சீனி. முருகையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.