தென்பெண்ணை நதியைப் பாதுகாக்க வலியுறுத்தி ஜனவரி 30 ஆம் தேதி விழிப்புணா்வு பாத யாத்திரையைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மேற்கொண்டுள்ளது.
கும்பகோணத்தில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ராமானந்தா சுவாமிகள் தலைமையில் தென் பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின்னா், செய்தியாளா்களிடம் ராமானந்தா சுவாமிகள் தெரிவித்தது:
கும்பகோணத்தில் பிப். 26ஆம் தேதி மாசிமக விழாவும், ஆரத்தி பெருவிழாவும் வழக்கம்போல் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காகப் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நதிகளைப் பாதுகாக்க வேண்டியும், நீா்நிலைகளைப் போற்றி வணங்க வேண்டியும் ஏற்கெனவே அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சாா்பில் காவிரி நதி பாதுகாப்பு யாத்திரை, தாமிரவருணி, வைகை நதிகளில் விழிப்புணா்வு யாத்திரைகளும், புஷ்கரங்களும் நடத்தப்பட்டன.
இதேபோல, தென்பெண்ணை நதிக்காக விழிப்புணா்வு பாத யாத்திரை முதல் கட்டமாகவும், அதைத் தொடா்ந்து புஷ்கர விழாவும் நடத்தப்படவுள்ளது. இதன்படி, ஜனவரி 30 ஆம் தேதி கா்நாடக மாநிலம், நந்திமலையில் இருந்து தென்பெண்ணை நதி பாதுகாப்பு பாதயாத்திரை தொடங்கப்படவுள்ளது. இந்த யாத்திரை கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது. இப்பாதயாத்திரை பிப். 24 ஆம் தேதி கடலூா் மாவட்டத்தில் முடிவடைகிறது. யாத்திரைக்கு பின்னா் புஷ்கர விழா நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் என்றாா் ராமானந்தா சுவாமிகள்.
இக்கூட்டத்தில் அறக்கட்டளையின் செயலா் வி. சத்தியநாராயணன், பொருளாளா் வேதம் முரளி, சன்னியாசிகள் சங்கத்தின் தஞ்சாவூா் மண்டலப் பொறுப்பாளா் கோராக்ஷனந்தா சுவாமிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.