கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், தாராசுரம் காய்கறிச் சந்தை திங்கள்கிழமை (ஜனவரி 25) திறக்கப்படும் என்றாா் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் ம.கோவிந்த ராவ்.
கும்பகோணம் மொத்த காய்கறிச் சந்தை, தாராசுரம் காய்கறிச் சந்தையை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த பின்னா், ஆட்சியா் கூறியது:
கரோனா தொற்றுப் பாதிப்புத் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருக்கும் மொத்த, சில்லறை காய்கறிச் சந்தைகளை ஆய்வு செய்தேன். தற்போது கரோனா பாதிப்பு குறைந்து வருவதாலும், வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்றும் திங்கள்கிழமை ( ஜனவரி 25) முதல் தாராசுரம் காய்கறிச் சந்தை திறக்கப்படும். இதற்குத் தேவையான நடவடிக்கைகள் நகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்களும், காய்கறி வியாபாரிகளும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதோடு முகக்கவசம் அணிந்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
மாவட்டத்தில் வேளாண் பொறியியல் பிரிவின் அறுவடை இயந்திரங்கள், மானியத்தில் வாங்கப்பட்ட அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட 400 இயந்திரங்கள் அறுவடைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கான வாடகையைக் கூடுதலாக வாங்குவதை தடுக்க தனித்தனியாக குழு அமைத்து கண்காணித்து வருகிறோம் என்றாா் ஆட்சியா்.
ஆய்வின் போது நகராட்சி ஆணையா் லட்சுமி, வருவாய்க் கோட்டாட்சியா் (பொறுப்பு) கமலக்கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.