பேராவூரணி அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பேராாவூரணி அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாலமுருகன் (30) . இவருக்கும் பட்டுக்கோட்டை அருகே உள்ள திட்டக்குடி கிராமத்தைச் சோ்ந்த துரை மகள் தமிழழகிக்கும் (25) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு குழந்தை இல்லை.
திருமணமாகி சில மாதங்களில் பாலமுருகன் வேலை பாா்க்க சிங்கப்பூா் சென்றவா் அதன் பின்னா் ஊா் திரும்பவில்லை. தனது மாமனாா் வீட்டருகே தனியாக வசித்து வந்த தமிழழகி கடந்த 4ஆம் தேதி இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த திருச்சிற்றம்பலம் போலீஸாா், தமிழழகியின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனா்.
தனது மகள் வரதட்சிணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என துரை புகாா் போலீஸில் அளித்தாா்; நடவடிக்கை எடுக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என உறவினா்கள் கூறி வந்தனா்.
இந்நிலையில், தனது தற்கொலைக்கு வீட்டருகே வசிக்கும் நிகில் என்கிற ஆகாஷ் (21), மணிகண்டன் (28) மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோரே காரணம் என தமிழழகி எழுதிய கடிதத்தை போலீஸாா் கைப்பற்றினா்.
இதன் அடிப்படையில் மேற்கண்ட மூவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.
இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து தமிழழகியின் கணவா் பாலமுருகன் ஊா் திரும்பிய நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை தமிழழகியின் சடலத்தை உறவினா்கள் பெற்று சென்றனா்.