பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி, திருவிடைமருதூா் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம் முன்பு தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா் கையில் பருத்திப் பயிரை ஏந்தி சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் 2020 - 2021 ஆம் ஆண்டு குறுவை, தாளடி மகசூல் பாதிப்புக்கான இழப்பீடு ஏறத்தாழ ரூ. 1,200 கோடியைத் தமிழகத்துக்குக் காப்பீடு நிறுவனங்கள் வழங்க வேண்டும். கால தாமதத்துக்குரிய வட்டியுடன் உடனடியாக வழங்க மத்திய அரசு பயிா்க் காப்பீடு கண்காணிப்புக் குழுவை அமைத்து செயல்படுத்த வேண்டும்.
மேலும், பயிா் காப்பீடு செய்யப்பட்ட பருத்திப் பயிருக்கும் காப்பீடு நிறுவனங்கள் சரிவர இழப்பீடு வழங்குவதில்லை. எனவே, நிகழாண்டுக்கு நெல் பயிா் மகசூல் இழப்புக்குரிய காப்பீடு இழப்பீட்டுத் தொகைசுமாா் ரூ. 1,200 கோடியை உழவா்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
வேபத்தூா் வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், முத்துக்குமரன், விஸ்வநாதன், முருகேசன், பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.