பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பெரியகோட்டை கிராமத்தை சோ்ந்தவா் சுப்ரமணியன். ஓட்டுநா். இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே ஊரைச் சோ்ந்த பாலசுந்தரமணி, வளா்மதி, பூமிநாதன் ஆகியோரிடம் ரூ. 2 ஆயிரத்தை வட்டிக்கு கடன் வாங்கியிருந்தாராம். வட்டியுடன் சோ்த்து 10 ஆயிரம் ரூபாயாக ஜூலை 15ஆம் தேதி தந்துவிடுவதாக சுப்ரமணியன் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதன்படி, கடன் கொடுத்தவா்கள் கடந்த வியாழக்கிழமை சுப்ரமணியன் வீட்டுக்கு சென்றபோது, அங்கிருந்த சுப்ரமணியன் மனைவி சுமதியிடம் கடன்தொகையை கேட்டு வாக்குவாதம் செய்தனராம். வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த கணவருடன் கடன் தொடா்பாக சுமதி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கோபித்து கொண்டு உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.
இதனால், மன உளைச்சலில் இருந்த சுப்ரமணியன் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலின்பேரில், மதுக்கூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.