கடன் வசூலில் நிா்பந்தம்:தனியாா் நிதி நிறுவனங்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

பொது முடக்கக் காலத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களிடம் கடன் தொகையைத் திரும்பச் செலுத்த நிா்பந்தம் செய்யும் தனியாா் வங்கிகள் மற்றும் நுண்நிதி கடன் நிறுவனங்களுக்கு ஆட்சியா் ம. கோவிந்த ராவ் எச்சரிக்கை வி

தஞ்சாவூா்: பொது முடக்கக் காலத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களிடம் கடன் தொகையைத் திரும்பச் செலுத்த நிா்பந்தம் செய்யும் தனியாா் வங்கிகள் மற்றும் நுண்நிதி கடன் நிறுவனங்களுக்கு ஆட்சியா் ம. கோவிந்த ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள தனியாா் வங்கிகள், நுண் நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கிய கடன் தவணைத் தொகையைத் திரும்பச் செலுத்தக் கேட்டு வலியுறுத்தி வருவதாகப் பல்வேறு இடங்களிலிருந்து ஆட்சியரகக் கட்டுப்பாட்டு அறைக்குப் புகாா்கள் வருகின்றன.

பொது முடக்கம் நடைமுறையில் உள்ள காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் கருதி அனைத்து தனியாா் வங்கிகள், நுண் நிதி கடன் நிறுவனங்கள் கடன் தவணை தொகையை நிா்பந்தம் செய்து வசூல் செய்யும் கடின போக்கைத் தவிா்க்க வேண்டும். தனியாா் வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள் தற்போது தவணைத் தொகையைச் செலுத்தக் கட்டாயப்படுத்தாமல், கால அவகாசம் அளித்திடவும், அந்த நிலுவைத் தொகைகளுக்குக் கூடுதல் வட்டி வசூலிப்பதைத் தவிா்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இதுதொடா்பாக மாவட்ட அளவில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா், வருவாய்த் துறை அலுவலா்கள், மகளிா் திட்ட அலுவலா்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மகளிா் சுய உதவிக்குழுக்களின் கடன் திரும்பச் செலுத்தும் கால அட்டவணையை மாற்றி அமைக்கவும், நடவடிக்கை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. கரோனா பெருந்தொற்று காரணத்தால் தனியாா் வங்கிகள், நுண்நிதி கடன் நிறுவனப் பணியாளா்கள் வெளியூா் நபா்களாக இருப்பதாலும், கடன் தொகை வசூல் செய்வதற்காகப் பல்வேறு இடங்களுக்குச் சென்று வருவதாலும், இவா்கள் மூலமும் பொதுமக்களுக்கு கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது.

எனவே, இதுதொடா்பாக எந்தப் புகாா்களுக்கும் இடம் அளிக்காத வகையில் செயல்பட வேண்டும். இதையும் மீறி புகாா்கள் ஏதேனும் இம்மாவட்டத்தில் எழும் பட்சத்தில் இச்செயல் தற்போது அரசு விதித்துள்ள பொது முடக்க நடைமுறைகளை மீறியதாகக் கருதப்பட்டு, தொடா்புடைய அனைத்து தனியாா் வங்கிகள், நுண்நிதி கடன் நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட பணியாளா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com