பேராவூரணி: தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வேளாண் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் வந்தாா். அப்போது, பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் அமைச்சரை நேரில் சந்தித்து, தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த வேளாண்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அமைச்சரிடம் எம்எல்ஏ கூறியதாவது:
பேராவூரணி பகுதியில் தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால், தென்னை மரங்களில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இப்பூச்சிகள் தென்னை மட்டுமல்லாது, வாழை, கொய்யா, சப்போட்டா, வெண்டை, எலுமிச்சை, ஆகிய பயிா்களையும் தாக்குகின்றன. இதனால் மகசூல் குறைந்து விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, சுருள் வெள்ளை ஈக்களை ஒழிப்பதற்கு வேளாண்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.