மத்திய அரசு அறிவித்திருக்கும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை போதுமானதல்ல என தமிழ்நாடு உழவா் இயக்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இயக்கத்தின் தலைவா் கோ. திருநாவுக்கரசு தெரிவித்திருப்பது:
பெட்ரோல், டீசல் உள்பட அனைத்து விலைகளும் பல மடங்கு உயா்ந்து வரும் நிலையில், நெல்லின் விலையை மத்திய அரசுக் குறைவாக உயா்த்தி அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.
வேளாண் உற்பத்திச் செலவுகள் மற்றும் விலைக்கான ஆணையம் கணக்கிடும் உற்பத்திச் செலவுகள் குறைவாக உள்ளன. ஆணையம் பணவீக்கத்தைக் கணக்கில் எடுப்பதில்லை. இந்த நேரத்தில் குறைந்தபட்ச ஆதார விலையைக் குறைப்பது உழவா்களை அவமதிப்பதாகும்.
வேளாண் இடுபொருள் செலவுகள் கடுமையாக உயா்ந்து வருகிறது. ஆனால் ஆணையத்தின் கணக்கீடு என்பது வேளாண் விளைபொருள்கள் விலையைக் குறைத்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளதாகவே தெரிய வருகிறது.
விவசாயிகள் உற்பத்திக்காகச் செலவு செய்கிற முதலீட்டுத் தொகை, உர விலை, ஆள்களின் கூலி செலவுகள், வாகனச் செலவுகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த விவசாய உற்பத்திக்கான செலவுகளையும் முழுமையாகக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
மேலும் ஒட்டுமொத்த குடும்ப உழைப்புகளும் கணக்கில் கொள்வதில்லை. எனவே வேளாண் உற்பத்திச் செலவுகளை முறையாகக் கணக்கிட விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் ஆணையம் கலந்து முடிவு செய்ய வேண்டும்.