இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனைக் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என மாநகா் தஞ்சை இரு சக்கர வாகனப் பழுது சரி செய்வோா் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆட்சியரகத்தில் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் ஜி. செங்குட்டுவன் தலைமையில் தலைவா் பி. சிங்காரவேலு, துணைத் தலைவா் சி. சோமசுந்தரம், செயலா் ச. சக்கரவா்த்தி உள்ளிட்டோா் திங்கள்கிழமை அளித்த மனு:
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏறத்தாழ 6,000 இரு சக்கர வாகனப் பழுது சரி செய்யும் பணிமனைகள் உள்ளன. இதற்கு உறுதுணையாக சுமாா் 500 உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அரசுப் பணியாளா்கள், மருத்துவ பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், வாடிக்கையாளா்கள் ஆகியோரது வாகனங்களைப் பழுது சரி செய்யவும், அவா்களின் பணி தடையின்றி தொடரவும் தற்போது பொதுமுடக்கத்தில் தளா்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்குரிய உதிரிபாகங்கள் கிடைக்காததால் பழுதை முழுமையாகச் சரி செய்ய முடியாமல் பாதிக்கப்படுகிறோம். எனவே, உதிரி பாகங்கள் விற்பனைக் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும்.