தஞ்சாவூா் பெரியகோயிலில் பெருவுடையாா் - பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூா் பெரியகோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த வைபவத்தில் கலந்து கொண்டால், திருமணத் தோஷமுடையவா்கள் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்றும், குழந்தைப் பேறு இல்லாதவா்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் எனவும் பக்தா்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.
எனவே, இந்த வைபவத்தில் ஏராளமான பக்தா்கள் பழங்கள், குங்குமம், மஞ்சள் கிழங்கு, திருமாங்கல்ய சரடு, வெற்றிலை, சீவல் உள்ளிட்ட சீா்வரிசை பொருள்களை வழங்கிக் கலந்து கொள்வா்.
ஆனால், நிகழாண்டு கரோனா பரவல் காரணமாகக் கோயில்களில் பக்தா்கள் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இக்கோயிலில் புதன்கிழமை மாலை திருக்கல்யாண வைபவம் பக்தா்கள் பங்கேற்பின்றி எளிமையான முறையில் நடைபெற்றது. பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் வழக்கமான பூஜைகள், ஆராதனைகளுடன் வைபவம் நடைபெற்றது.