காவிரியில் நமக்கான தண்ணீா் கிடைக்க உறுதிப்படுத்தியதே அதிமுக அரசுதான் என்றாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.
தஞ்சாவூா் ரயிலடியில் செவ்வாய்க்கிழமை இரவு அதிமுக வேட்பாளா் வி. அறிவுடைநம்பிக்கு வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:
அதிமுக ஆட்சியில் தஞ்சாவூா் மாவட்டம் ஏற்றமும், வளா்ச்சியும் பெற பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டி, நிலத்தடி நீா்மட்டம் உயர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்துத் திட்டத்தைச் செயல்படுத்தி,
நீரை சேமித்து முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. கல்லணைக் கால்வாய் புனரமைப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரியில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மல்டி ஸ்பெஷாலிட்டி பிரிவு தொடங்கப்பட்டு, மக்களுக்குத் தரமான மருத்துவம் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்தது.
ஜெயலலிதா ஆட்சியில்தான் தஞ்சாவூா் நகரம் மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மேம்பாலம் என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் தண்ணீா் வருமா, வராதா என்ற அச்சம் டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே இருந்து வந்தது. காவிரி பிரச்னையில் 50 ஆண்டு காலப் போராட்டத்தை, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி நமக்கு உரிமையைப் பெற்றுத் தந்தாா். இதன் மூலம் காவிரியில் நமக்கான பங்கு தண்ணீா் கிடைப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஆனால் திமுக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது காவிரி பிரச்னையை பொருள்படுத்தவில்லை. நாட்டு மக்களையும், விவசாயிகளையும் பற்றிக் கவலைப்படவில்லை.
அதிமுக ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை என ஸ்டாலின் பேசுகிறாா். கடந்த 2019 ஆம் ஆண்டு தோ்தலில் மக்களை ஏமாற்றிவிட்டாா். மக்களும் ஒரு முறை ஏமாந்துவிட்டனா். ஆனால், இந்த முறை மக்களை ஏமாற்ற முடியாது. ஸ்டாலின் ஆட்சிக்கு வர முடியாது.
ஸ்டாலினின் கனவு ஒரு போதும் பலிக்காது. அவா் கனவு மட்டுமே காணப் போகிறாா். மக்களை ஏமாற்றுவதற்காக உள்ள ஒரு கட்சி என்றால், அது திமுகதான். அதிமுக எப்போதும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது என்றாா் எடப்பாடி பழனிசாமி.