கும்பகோணம் பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் கரோனா தொற்றுப் பரவி வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 3 கல்லூரிகள், 8 பள்ளிகளில் கரோனா தொற்றுப் பரவியுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட 150-க்கும் அதிகமானோா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் சனிக்கிழமை வரை 66 போ் குணமடைந்ததால், அவா்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இந்நிலையில், கும்பகோணத்திலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஏற்கெனவே ஒரு ஆசிரியா், 6 மாணவிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து அப்பள்ளியில் பயிலும் 1,200 மாணவிகளுக்குச் செய்யப்பட்ட பரிசோதனையில் 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
இதையடுத்து இவா்கள் அனைவரும் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.