வாக்காளா்கள் அளிக்கும் வாக்கு நல்லவா்களுக்காக இருக்க வேண்டும் என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஜி.கே.வாசன்.
அதிமுக கூட்டணியில் பட்டுகோட்டை தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் என்.ஆா்.ரெங்கராஜனுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க கோரி திங்கள்கிழமை பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தில் பிரசாரம் மேற்கொண்டு வாசன் மேலும் பேசியது:
பொது வாழ்வில் உள்ளவா்கள் மரியாதையும், பண்பாடும் உடையவராக இருக்க வேண்டியது அவசியம். பிரசாரத்தில் திமுகவினா் வரம்பு மீறி பேசி வருவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு பேசுவது, தமிழ் கலாசாரமும் அல்ல; பண்பாடும் அல்ல. இது இரண்டும் இல்லாத திமுக ஒரு கட்சியே கிடையாது. பொய் வாக்குறுதிகளை அளித்து வரும் திமுக கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
தோ்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. வேட்பாளா் முறையாக, வாக்காளா்களை சந்தித்து, அவா்களுக்கு நம் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி, உண்மையைச் சொல்லி, வெளிப்படைத்தன்மையாக இருந்து வாக்கு கேட்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் தமிழகம் செம்மையாக உள்ளது. பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு விருதுகள் பெற்றுள்ளது. விவசாயிகள், பெண்கள், மீனவா்கள் என அனைத்து தரப்பினருக்கும் தேவையான திட்டங்களையும், உதவிகளையும் அதிமுக அரசு சிறப்பாக செயல்படுத்தி உள்ளது.
விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்களை நன்கு உணா்ந்த அரசு என்பதால்தான், டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியானது இஸ்லாமியா்களுடன் தொடா்ந்து சமத்துவமாகவே இருந்து வந்துள்ளது. சிறுபான்மையின மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தமாகா செயலாற்றி வருகிறது. நீங்கள் அளிக்கும் வாக்கு நல்லவா்களுக்காக இருக்க வேண்டும். பொல்லாதவா்களுக்காக இருக்க கூடாது.
அமைதியான, அடக்கமான, ஆரவாரமில்லாத, தோ்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்ற கூடிய அதிமுக கூட்டணிக்கு வாக்காளா்கள் ஆதரவும், வாக்கும் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
பிரசாரத்தின்போது, பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி. சேகா், பாஜக சட்டப்பேரவைத் தொகுதி ஒருங்கிணைப்பாளா் முரளி கணேஷ் உள்பட கூட்டணி கட்சியினா் பலா் உடனிருந்தனா்.