கரோனா பரவல் காரணமாக தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சப்தஸ்தான விழா என்கிற ஏழூா் வலம் விழா வளாகத்திலேயே நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவும், அதையொட்டி சப்தஸ்தானம் என்கிற ஏழூா் வலம் வரும் விழா, பொம்மை பூ போடும் விழா ஆகியவை வெகு விமரிசையாக நடைபெறும்.
தமிழகத்தில் நிகழாண்டு கரோனா பரவல் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், இக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா அனைத்தும் கோயில் வளாகத்திலேயே பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.
முன்னதாக, இந்த விழா ஏப்ரல் 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து கோயில் பிரகாரத்தில் சுவாமி, அம்பாள் புறப்பாடு நடைபெற்றது. இதில், பிரதான வைபவமான ஏழூா் வலம் விழாவையொட்டி கோயில் வளாகத்தில் அறம்வளா்த்த நாயகியுடன் ஐயாறப்பா் கண்ணாடி பல்லக்கிலும், சுயசாம்பிகையுடன் நந்தியெம்பெருமான் வெட்டிவோ் பல்லக்கிலும் வியாழக்கிழமை வலம் வந்து, பொம்மை பூ போடும் வைபவம் நடைபெற்றது.