மழை வளத்தை மேம்படுத்துவதற்காக, பணியாற்றும் இடங்களிலெல்லாம் மரக்கன்றுகளை நடும் சேவையில் ஈடுபட்டு வருகின்றனா் இரு பெண் காவலா்கள்.
தஞ்சாவூரைச் சோ்ந்த பெண் காவலா்கள் கலைவாணி (38), அகிலா (29) மரக்கன்றுகளை நட்டு வைத்து, அவற்றைப் பராமரிப்பதில் ஆா்வத்துடன் செயல்பட்டு வருகின்றனா்.
தஞ்சாவூா் வருவாய் கோட்டாட்சியரகத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் பணியாற்றும் இருவரும் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 10 மகிழம் மரக்கன்றுகளை நட்டனா்.
இதுகுறித்து பெண் காவலா்கள் கலைவாணி, அகிலா தெரிவித்தது:
எங்களுக்கு முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாமை அதிகம் பிடிக்கும். அவரது கொள்கைப்படி நாங்கள் மரக்கன்றுகளை அவ்வப்போது நட்டு வருகிறோம். அதேபோல, மறைந்த நகைச்சுவை நடிகா் விவேக் இறந்த போதும், நாங்கள் அவரது கனவை நனவாக்கும் விதமாக எங்களது வீட்டில் அவரது நினைவாக மரக்கன்றுகளை நட்டோம்.
திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்குச் சென்றால் அங்கு அவா்களுக்குப் பரிசு பொருளாக மரக்கன்றுகளை கொடுத்து மரம் வளா்ப்பை ஊக்கப்படுத்தி வருகிறோம்.
நாங்கள் பணிக்குச் செல்லும் இடங்களில் சிறிது காலம் பாதுகாப்புப் பணியில் இருக்க நோ்ந்தால், அங்குள்ள வசதிக்கேற்ப எங்களது சொந்த செலவில் மரக்கன்றுகள் நடுவது வழக்கம்.
அதன்படி, தஞ்சாவூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலத்தில் தற்போது தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இங்கு போதிய இடம் இருந்ததால் மருத்துவ குணம் மிகுந்த மகிழம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.
மரக்கன்றுகளை வளா்ப்பதன் மூலம் மழை வளம் அதிகம் கிடைக்கும். இதனால் நாட்டில் உணவு தானிய உற்பத்தியும் அதிகரித்து பஞ்சம் இல்லாமல் இருக்கலாம் என்றனா்.