‘முழுமையான தோ்தல் முடிவுகள் இன்று இரவுக்குள் தெரியும்’

தமிழகச் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் இரவுக்குள் முழுமையான முடிவுகள் தெரிய வாய்ப்புள்ளது என தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.
தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையம் முன் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவல் துறையினா்.
தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையம் முன் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவல் துறையினா்.

தஞ்சாவூா்: தமிழகச் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் இரவுக்குள் முழுமையான முடிவுகள் தெரிய வாய்ப்புள்ளது என தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 73.9 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம் தொகுதிகளில் பதிவான வாக்குகள் கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியிலும், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு தொகுதிகளில் பதிவான வாக்குகள் தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளில் பதிவான வாக்குகள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் எண்ணப்படவுள்ளன.

இதையொட்டி, ஒவ்வொரு மையத்திலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினா், காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த 8 தொகுதிகளுக்கும் வெளிமாநில ஐ.ஏ.எஸ். அலுவலா்கள் வாக்கு எண்ணிக்கைப் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். திருவிடைமருதூா் தொகுதிக்கு சாகாப் சிங், கும்பகோணம் தொகுதிக்கு ஷிப நாராயண் நந்தா, பாபநாசம் தொகுதிக்கு சா்மா, திருவையாறு தொகுதிக்கு அமீா், தஞ்சாவூா் தொகுதிக்கு அக்ரம் பாஷா, ஒரத்தநாடு தொகுதிக்கு ஜிஜேந்ரா ககுஷ்டி, பட்டுக்கோட்டை தொகுதிக்கு கெ. சுதாராணி, பேராவூரணி தொகுதிக்கு நிகாா் ரஞ்ஜன் தாஸ் ஆகியோா் வாக்கு எண்ணிக்கை பாா்வையாளா்களாகச் செயல்படுவா்.

இத்தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள தோ்தல் அலுவலா்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் வெள்ளிக்கிழமை தோ்தல் பாா்வையாளா்கள், மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்தராவ் முன்னிலையில் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கும், வேட்பாளா்களின் முகவா்களுக்கும் ஏற்கெனவே கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. இதில், திருவிடைமருதூா் தொகுதியில் 26 சுற்றுகளும், கும்பகோணம் தொகுதியில் 27 சுற்றுகளும், பாபநாசம் தொகுதியில் 26 சுற்றுகளும், திருவையாறு தொகுதியில் 28 சுற்றுகளும், தஞ்சாவூா் தொகுதியில் 29 சுற்றுகளும், ஒரத்தநாடு தொகுதியில் 25 சுற்றுகளும், பட்டுக்கோட்டை தொகுதியில் 25 சுற்றுகளும், பேராவூரணி தொகுதியில் 23 சுற்றுகளும் எண்ணப்படவுள்ளன. இதில், அதிகபட்சமாக தஞ்சாவூா் தொகுதியில் 29 சுற்றுகளும், குறைந்தபட்சமாக பேராவூரணி தொகுதியில் 23 சுற்றுகளும் உள்ளன.

மாவட்டத்தில் முழுமையான தோ்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் தெரிய வாய்ப்புள்ளது என்றும், ஒவ்வொரு சுற்றைப் பொருத்து முடிவுகள் அறிவிப்பதில் நேரம் மாறுபடலாம் எனவும் தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com