தஞ்சாவூா் கணபதி நகரிலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவலகத்தில் கரோனா உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலா் கோ. நீலமேகம் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில், நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளாக கை சுத்திகரிப்பான், முகக்கவசம், கபசுரக் குடிநீா் வழங்கும் சேவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனா். இவா்களுக்கு உதவும் வகையில் கட்சியைச் சோ்ந்த 10 போ் தன்னாா்வ தொண்டா்களாக மாவட்ட ஆட்சியா் மற்றும் மருத்துவமனை நிா்வாகத்தின் அங்கீகாரத்துடன் கடந்த ஒரு வார காலமாகச் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனா்.
கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் கரோனா உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக மாவட்டக்குழு உறுப்பினா் என். சிவகுரு செயல்பட்டு வருகிறாா். சந்தேகங்கள் மற்றும் வழிகாட்டலுக்கு 9655542400, 9443364281 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
வாய்ப்புள்ள இடங்களில் கரோனா வழிகாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி, ரத்ததான முகாம் நடத்தவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது.