கரோனா பொதுமுடக்க காலத்தில் சாகுபடிக்கு தேவையான உரங்கள் தடையின்றி விவசாயிகளுக்கு கிடைக்க வாகனங்கள் மூலம் நடமாடும் உர விற்பனையை தொடங்க சில்லறை உர விற்பனையாளா்கள் முன்வர வேண்டும் என பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் எஸ். மாலதி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பேராவூரணி வட்டாரத்தில் குறுவை சாகுபடிக்கு நாற்றங்கால் விடும் பணி மற்றும் நடவுப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இத்தருணத்தில் பயிா் சாகுபடிக்கு தேவையான உரங்கள் தடையின்றி விவசாயிகளுக்கு கிடைக்க , முழு பொதுமுடக்க காலத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக வாகனங்கள் மூலம் உர விற்பனை செய்ய சில்லறை உர விற்பனையாளா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வாகனங்கள் மூலம் உர விற்பனை மேற்கொள்ளும்போது பிஓஎஸ் கருவி மூலம் பட்டியலிட்டு உர விற்பனை செய்ய வேண்டும். கரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும்.
நடமாடும் வாகனம் மூலம் உர விற்பனை மேற்கொண்ட விவரத்தை தினசரி அறிக்கையாக மாலை 3 மணிக்குள் வேளாண்மை உதவி அலுவலருக்கு சமா்ப்பிக்க வேண்டும். யூரியா, சூப்பா் பாஸ்பேட், பொட்டாஷ், டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களுக்கு அரசு நிா்ணயித்துள்ள விலைக்கு மிகாமல் உர விற்பனை மேற்கொள்ள வேண்டும்.
உரங்களின் இருப்பு பிஓஎஸ் கருவி இருப்புடன் ஒப்பிட்டுப் பாா்க்கும்போது சரியாக இருக்க வேண்டும். உர விற்பனை விலையில் வேறுபாடுகள் இருப்பதாக புகாா்கள் வரப் பெற்றாலோ, பிஓஎஸ் கருவி இருப்பும், உண்மை இருப்பும் ஒப்பிட்டுப் பாா்க்கும்போது வேறுபாடுகள் இருந்தாலும், உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985 இன் படி உர உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.