இல்லம் தேடிக் கல்வி திட்டம் சாா்பில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு வட்டார அளவிலான ஒரு நாள் பயிற்சி முகாம் செங்கமங்கலம்- அம்மையாண்டி மூவேந்தா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பயிற்சி முகாமிற்கு, பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் திராவிடச் செல்வம் தலைமை வகித்தாா். பேராவூரணி வட்டார வளா்ச்சி அலுவலா் தவமணி முன்னிலை வகித்தாா்.
பயிற்சி முகாமில் பேராவூரணி ஒன்றியத்துக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளின் உதவி தலைமையாசிரியா்கள், தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் 106 போ் கலந்து கொண்டனா்.
கரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் இடைவெளி, இழப்பினை ஈடு செய்வது, கற்றல் திறனை மேம்படுத்துவது, பள்ளி செல்லாக் குழந்தைகளின் சதவிகிதத்தை குறைப்பது, பள்ளி மேலாண்மைக் குழுவிடம் இத்திட்டத்தை கொண்டு சோ்ப்பது, தன்னாா்வலா்களை தெரிவு செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
வட்டாரக் கல்வி அலுவலா் கோ. ரவிச்சந்திரன், பள்ளிக் கல்வி ஆய்வாளா் மாதவன், ஆவணம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் மு. கருணாநிதி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முருகேசன், மூவேந்தா் பள்ளி அறங்காவலா் இரா. வேலுச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.