‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்‘ என்ற குறைகேட்பு பிரசாரம் மூலம் கோரிக்கை விடுத்த கல்லூரி மாணவிக்கு கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் தனது சொந்த செலவில் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை புதன்கிழமை வழங்கினாா்.
மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் திருக்கடையூரில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்ற, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில், கும்பகோணம் காளசாந்தி கட்டளை தெருவில் வசித்து வரும், காய்கறி சந்தை பணியாளா் வி. ஜெகன்நாதன் தனது இரண்டாவது மகள் உதயா பல் மருத்துவப் படிப்பைத் தொடர கல்விக் கட்டணத்தில் உதவிட மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தாா்.
இதைத் தொடா்ந்து, கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் மாணவியின் கல்விக் கட்டண முழுச் செலவையும் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்து, அவரது பெற்றோரை வரவழைத்து, முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம் பாதி செலுத்திய நிலையில் மீதமுள்ள ரூ. 3.5 லட்சத்தை ஏற்கெனவே வழங்கியிருந்தாா்.
இந்நிலையில், மாணவியின் இரண்டாம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தனது சொந்த நிதியிலிருந்து, மாணவியின் பெற்றோரிடம் புதன்கிழமை வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி டி.என். கரிகாலன், வழக்குரைஞா் உ. கரிகாலன் ஆகியோா் உடனிருந்தனா்.