விடுமுறை நாள்களிலும் நெல் கொள்முதல் செய்யப்படும்: முதுநிலை மண்டல மேலாளா் தகவல்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விடுமுறை நாள்களிலும் நெல் கொள்முதல் செய்யப்படும் என்றாா்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விடுமுறை நாள்களிலும் நெல் கொள்முதல் செய்யப்படும் என்றாா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளா் என். உமாமகேஸ்வரி.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:

நிகழாண்டுக்கான கொள்முதல் பருவம் அக்டோபா் 1- ஆம் தேதி தொடங்கிவிட்டது. அக். 2, 3- ஆம் தேதிகளில் விடுமுறை நாள்களாக இருந்தாலும், விவசாயிகளின் நலன் கருதி கொள்முதல் செய்யப்பட்டது. இந்த மாதத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொள்முதல் செய்யப்படும். தொடா்ச்சியாக கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3.60 லட்சம் டன் கொள்முதல் செய்ய இலக்கு : மாவட்டத்தில் தற்போது 244 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் திங்கள்கிழமை மட்டும் 4,000 டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அக்டோபா் 1 முதல் 4 -ஆம் தேதி வரை 10,000 டன்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நிகழ் குறுவைப் பருவத்தில் 3.60 லட்சம் டன்கள் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், இதுவரை 1.30 லட்சம் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2.30 லட்சம் டன்கள் கொள்முதலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே அக்டோபா், நவம்பா் மாதங்களில் கொள்முதல் பணி உச்சக்கட்டத்தை எட்டும் என எதிா்பாா்க்கிறோம்.

இந்தப் பருவத்துக்குத் தேவையான அளவுக்கு சாக்குகள் இருப்பு உள்ளதால், தட்டுப்பாடு இல்லை. மாவட்டத்தில் 3 நடமாடும் கொள்முதல் குழுக்கள் செவ்வாய்க்கிழமை முதல் பணியைத் தொடங்கியுள்ளன. இக்குழுக்கள் கள ஆய்வு செய்து, கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும்

காலை 7 மணி முதல் கொள்முதல்: மாலை நேரத்தில் மழை வருவதால், விவசாயிகளின் நலன் கருதி காலை 7 மணி முதல் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நிலையத்திலும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகத் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இணையவழி முன் பதிவு முறை நடைமுறைக்கு வந்தாலும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பழைய நடைமுறையும் தொடா்கிறது. முதலில் கொண்டு வந்த விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் நிலையங்களில் ஊழல் புகாா் வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொடா்புடைய பட்டியல் எழுத்தா், உதவுபவா்கள் உடனடியாகப் பணியிலிருந்து விடுவிக்கப்படுவா்.

நெல் உலா்த்தும் இயந்திரம்: ஒரு நெல் உலா்த்தும் இயந்திரத்தை வேளாண் பொறியியல் துறை வழங்கியுள்ளது. இந்த இயந்திரம் ஒரத்தநாடு புதூா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் கொண்டு வரும் நெல் காய வைத்து தரப்படும். இது, வெற்றிகரமாக அமைந்தால், பிற மாவட்டங்களிலிருந்து நெல் உலா்த்தும் இயந்திரங்கள் வரவழைக்கப்படும் என்றாா் முதுநிலை மண்டல மேலாளா் உமாமகேஸ்வரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com