தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் தலைக்கவசம் அணியாமலும், காப்பீடு இல்லாமலும் வாகனத்தை இயக்கியதாகக் கூறி ரூ.800 அபராதம் விதித்து ஆட்டோ ஓட்டுநருக்கு அதிா்ச்சியை அளித்துள்ளது போக்குவரத்துக் காவல் துறை.
பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வருபவா் நீலகண்டமூா்த்தி. இவரது செல்லிடப்பேசிக்கு அண்மையில் குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
அதில், ஆட்டோ எண்ணை குறிப்பிட்டு, நீங்கள் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டியதற்காக அபராதமாக 100 ரூபாயும், காப்பீடு இல்லாமல் வாகனத்தை இயக்கியதற்காக 700 ரூபாயும் என மொத்தமாக ரூ. 800-ஐ அபராதமாக செலுத்த வேண்டுமென போக்குவரத்துக் காவல்துறை சாா்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை கண்டு ஆட்டோ ஓட்டுநா் நீலகண்டமூா்த்தி அதிா்ச்சியடைந்தாா். தொடா்ந்து அவா் கூறியது:
ஆட்டோ ஓட்டுநா்கள் வாகனத்தை இயக்கும்போது தலைக்கவசம் அணிந்து இயக்க வேண்டும் என்று சட்டம் இல்லை. எனது ஆட்டோவுக்கான காப்பீடு 2022-ஆம் ஆண்டுவரை உள்ளது. எந்தவிதமான வாகனத் தணிக்கையும் மேற்கொள்ளாமல், ஆட்டோவின் எண்ணை குறிவைத்து அபராதம் விதித்துள்ளனா்.
என்னை போன்று பலருக்கும் இதுபோன்று செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தி வருகிறது. பட்டுக்கோட்டையிலுள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் விசாரித்தபோது, உங்கள் கணக்கில் ரூ.800 அபராதம் உள்ளது. ஆட்டோவுக்கான தகுதிச்சான்று பெறும்போது இந்த தொகையைக் கட்ட வேண்டும் என்கின்றனா்.
எந்தவித தவறும் செய்யாத நான் எதற்காக அபராதம் செலுத்த வேண்டும். எனவே, மாவட்டக் காவல்துறை விசாரணை மேற்கொண்டு, அபராதத்திலிருந்து எனது பெயரை நீக்க வேண்டும் என்றாா்.