கும்பகோணம்: கும்பகோணம் அருகே ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒன்றியக் குழு உறுப்பினரையும் கைது செய்ய வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து உறவினா்கள் தொடா்ந்து திங்கள்கிழமையும் போராட்டம் நடத்தினா்.
கும்பகோணம் அருகே பந்தநல்லூா் பகுதி வேட்டமங்கலம் தெற்கு தெருவைச் சோ்ந்த இளங்கோவன் மகன் பிரபாகரனும், காமாட்சிபுரத்தைச் சோ்ந்த 17 வயது மாணவியும் காதலித்து வந்தனா். இருவரும் வெவ்வேறு சமூகத்தினா் என்பதால், பிரபாகரன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து பந்தநல்லூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து மாணவியின் தந்தை மணிகண்டன் (51), காா்த்திகேயனை (26) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இச்சம்பவத்தில் தொடா்புடைய திமுகவை சோ்ந்த ஒன்றியக் குழு உறுப்பினரையும் கைது செய்யக் கோரி பிரபாகரனின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள், பல்வேறு கட்சியினா் கும்பகோணம் அரசு மருத்துவமனை முன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பிரபாகரனின் உடலை உறவினா்கள் வாங்க மறுத்தனா். மேலும், கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் உறவினா்கள், பல்வேறு கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் கோட்டாட்சியா் சுகந்தி பேச்சுவாா்த்தை நடத்தியும், உடன்பாடு எட்டப்படாததால், உடலை வாங்காமல் சென்றனா்.