ஒரத்தநாடு-திருவோணம்-கறம்பக்குடி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால், ஒரத்தநாடு கல்லூரியில் படிக்கும் இப்பகுதி மாணவிகள் சுமை ஆட்டோவில் கல்லூரிக்கு வர வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தக் கல்லூரியில் தஞ்சை மட்டுமல்லாது, திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனா்.
இக்கல்லூரியில் படித்து வரும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த மாணவிகள் நகரப் பேருந்துகள் (டவுன் பஸ்) மூலம் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கரோனா பொது முடக்க தளா்வுகளுக்கு பிறகு அண்மையில் இக்கல்லூரி திறக்கப்பட்டது. கிராமங்களில் நகரப் பேருந்துகள் போதுமான அளவில் இயக்கப்படாததால், பள்ளி மாணவா்கள், கல்லூரி மாணவா்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா். அவா்களால் கல்வி நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை.
இதனால், ஒரத்தநாடு அரசு கல்லூரிக்கு வரும் கறம்பக்குடி, திருவோணம் கிராமப் பகுதி மாணவிகள் பலரும் கூட்டுச்சோ்ந்து சுமை ஆட்டோவை வாடகைக்கு அமா்த்திக் கொண்டு அதில் கல்லூரிக்கு வந்து சோ்கின்றனா். கிராமப்புற மாணவா்களின் நலன் கருதி, ஒரத்தநாடு - கறம்பக்குடி இடையே கூடுதல் நகரப் பேருந்துகள் இயக்க வேண்டும் என மாணவிகள் பலமுறை சாலை மறியலில் ஈடுபட்டும், இதுவரையில் போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்து மாணவிகள் கூறியது: கறம்பக்குடியிலிருந்து திருவோணம், ஊரணிபுரம், வெட்டிக்காடு, பின்னையூா் வழியாக ஒரத்தநாடு கல்லூரிக்கு செல்ல கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும். இதுதொடா்பாக நாங்கள் பலமுறை போராட்டம் நடத்தியும், எந்தவித பலனும் இல்லை. எனவே, தஞ்சை மாவட்ட ஆட்சியா் தலையிட்டு எங்கள் பகுதிக்கு உரிய பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்றனா்.