தஞ்சாவூர்: சசிகலா குறித்து ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ள கருத்து சரியானது என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி மிஷன் தெருவில் மருது சகோதரர்கள் குருபூஜை விழாவையொட்டி, அவர்களது படத்துக்கு புதன்கிழமை காலை, மாலை அணிவித்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
மருது சகோதரர்கள் வீரத்துக்கும் விசுவாசத்துக்கும் சிறந்தவர்கள். அவர்களைப் போன்ற நல்ல மனிதர்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வருவதே எங்களது இலக்கு.
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்வோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது சரியானதுதான். அவர் எப்போதுமே நியாயமாகத்தான் பேசுவார். அவர் மனதில் பட்ட கருத்தைத் துணிந்து சொல்லியிருக்கிறார்.
அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுப்பதற்காகவும், தமிழ்நாட்டில் அம்மாவின் உண்மையான ஆட்சியை ஏற்படுத்துவதற்காகவும் அமமுக உருவாக்கப்பட்டது. இந்த முயற்சியை எங்களது இறுதி மூச்சு உள்ளவரை தொடர்வோம் என்றார் தினகரன்.