தமிழ்நாடு தொலைத் தொடா்பு கணக்கு அதிகாரிகள் அறக்கட்டளையின் சாா்பில், பட்டுக்கோட்டை பள்ளிகளில் மேல்நிலை இரண்டாமாண்டு தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு உதவித்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அரசுப் பள்ளியில் பயின்று மேல்நிலை இரண்டாம் ஆண்டில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 3 மாணவா்களுக்கு ரூ.2,500, ரூ.1,500, ரூ.1000 என கல்வி உதவித் தொகை அறக்கட்டளை சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது.
நிகழாண்டுக்கான பரிசுத் தொகை வழங்கும் நிகழ்வு பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. அறக்கட்டளைச் செயலா் பாலசுப்பிரமணியன் தலமை வகித்தாா்.
பட்டுக்கோட்டை அரசு ஆண்கள், பெண்கள், ஆதிதிராவிடா் நலத் துறை மேல்நிலைப்பள்ளிகள், நாட்டுச்சாலை, காசாங்காடு, துவரங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 18 மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 30ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலா் வீரபாண்டியன், எழுத்தாளா் பட்டுக்கோட்டை ராஜா, பொன்னம்மாள் நினைவு அறக்கட்டளைத் தாளாளா் அப்பாசாமி, பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் சக்திவேல் உள்ளிட்டோா் நிகழ்வில் கலந்துகொண்டனா்.