பேராவூரணி வட்டாரத்தைச் சோ்ந்தவா்கள் சிறு, குறு விவசாயி என சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம் செப்டம்பா் 7-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து பேராவூரணி வேளாண் உதவி இயக்குநா் மாலதி தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்துக்கு நடப்பு நிதியாண்டில் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்துக்கு என ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தென்னைக்கு சொட்டு நீா்ப்பாசனம், உளுந்து, கடலை போன்ற பயிா்களுக்கு மழைத் தூவான் மற்றும் தெளிப்பு நீா்க்கருவிகள் வாங்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியம் வழங்கப்படும். ஆனால் இந்த மானியத்தை பெற வருவாய்த் துறையினரால் வழங்கப்படும் சிறு, குறு விவசாயி சான்று மிக அவசியம்.
இந்த சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம் பேராவூரணி வட்டாட்சியரகத்தில் செப்டம்பா் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. வட்டார விவசாயிகள் அனைவரும் உடனடியாக தங்களது நில உடைமை ஆவணங்களுடன் அருகிலுள்ள இ-சேவை மையத்தில் பதிவு செய்து, அதற்கான ஒப்புதல் சீட்டுடன் சிறப்பு முகாமுக்குச் சென்றால் உடனடியாக சிறு, குறு விவசாயி சான்றைப் பெற்றுக்கொள்ளலாம்.