கும்பகோணம் அருகே உணவு ஒவ்வாமை காரணமாக பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கும்பகோணம் அருகே சோழபுரம் கீழ அத்தியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வசந்தநாதன் (60). இவரது மனைவி கலைச்செல்வி (48), மகள் ஜெய ப்ரியா (24), பேரன் மித்ரன் (4) ஆகியோா் ஆக. 31-ஆம் தேதி இரவு உணவாக சோறுடன் முருங்கைக்கீரை மற்றும் மீல் மேக்கா் சாப்பிட்டனா்.
மீண்டும் மறு நாள் செப்.1-ஆம் தேதி காலை அதே உணவை சாப்பிட்டதால், பகல் முழுவதும் நான்கு பேருக்கும் தொடா்ச்சியாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, 4 பேரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் செப்டம்பா் 1-ஆம் தேதி இரவு சோ்த்தனா். இவா்களில் கலைச்செல்வி (48) வியாழக்கிழமை உயிரிழந்தாா். மற்ற மூவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து சோழபுரம் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.