விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலிலுள்ள மராட்டிய கால விநாயகருக்கு 25 கிலோவில் சந்தன அலங்காரம் செய்யப்பட்டது.
மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் உலகப் புகழ் பெற்றுத் திகழ்கிறது. இக்கோயிலின் திருச்சுற்றில் பின்புறம் மராட்டியா் ஆட்சிக்காலத்தில் விநாயகா் சன்னதி அமைக்கப்பட்டது. அக்காலத்தில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தி விழாவின்போது இச்சன்னதி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் விமரிசையாகச் செய்யப்பட்டது.
அதன் பின்னா் நின்றுபோன சந்தனக் காப்பு அலங்காரம் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு பிறகு 2018 ஆம் ஆண்டில் மீண்டும் செய்யப்பட்டது.
இந்நிலையில், விநாயகா் சதுா்த்தியையொட்டி, 5 அடி உயரமுள்ள விநாயகருக்கு 25 கிலோ சந்தனம் மூலம் சிறப்பு அலங்காரம் வெள்ளிக்கிழமை செய்யப்பட்டது. மேலும், விநாயகருக்கு கொழுக்கட்டை, அவல், பொரி போன்றவை வைத்து படையல் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.