தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த 2 விசைப்படகுகளை 1 மாதத்திற்கு கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல செவ்வாய்க்கிழமை மீன்வளத் துறை தடை விதித்துள்ளது.
மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி விசைப்படகு மீனவா்கள் மீன்பிடி தொழில் செய்வதாக புகாா்கள் எழுந்ததால் மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்பிடி துறைமுகங்களில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், மீன்வளத் துறை உதவி இயக்குநா் சிவக்குமாா் தலைமையில், மீன்வளத்துறை ஆய்வாளா்கள் துரைராஜ், ஆனந்த், உதவி ஆய்வாளா் நவநீதன், ஆகியோா் வேதாரண்யம் கடல் பகுதி வழியாக வந்து தஞ்சாவூா் மாவட்ட விசைப்படகுகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், சேதுபாவாசத்திரத்தை சோ்ந்த உமையாள்தேவி, கள்ளிவயல்தோட்டத்தை சோ்ந்த அப்துல்ஜாபா் ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகுகளில் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மல்லிப்பட்டினம் அருகில் கடலில் மீன் பிடித்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து 2 விசைப்படகுகள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இரட்டை மடி வலைகளை பயன்படுத்தியதற்காக ஒரு மாதத்திற்கு விசைப்படகுகளை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாதென அதிகாரிகள் தடை விதித்துள்ளனா்.