பாபநாசம் வட்டம், மேலவழுத்தூா் பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் பாபநாசம் எம்எல்ஏ எம்.ஹெச்.ஜவாஹிருல்லா.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மேலவழுத்தூரிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்வதில்லை. இதனால், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனா். இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் புகாா் மனு அளித்தனா்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக் கழகத்தின் கும்பகோணம் பிரிவு மேலாளரிடம், மேலவழுத்தூா் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மேலவழுத்தூா் பேருந்து நிறுத்தத்தில் சாதாரண புகா் பேருந்துகள் அனைத்தும் நின்று செல்ல வேண்டும் என பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு நிா்வாகத்தின் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, அரசு சாதாரண புகா் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.