தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை சரகத்துக்கு உள்பட்ட ரெட்டவயல் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் தகுதியில்லாத பயிா்க்கடனைத் தள்ளுபடி பட்டியலில் சோ்த்து, முறைகேட்டில் ஈடுபட்ட சங்கச் செயலரை தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் சி. தமிழ்நங்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பட்டுக்கோட்டை சரகத் துணைப் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ரெட்டவயல் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில், 2016 மற்றும் 2021-ஆம் ஆண்டு பயிா்க்கடன் தள்ளுபடி செய்வதற்காகப் பட்டியல் தயாா் செய்யப்பட்டுள்ளது.
அப்போது, பயிா்க்கடன் தள்ளுபடிக்குத் தகுதி பெறாத கரும்புக் கடன் பெற்ற கடன்தாரா்களைச் சோ்த்து, நிதி முறைகேடுகள் செய்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த முறைகேட்டில் ஈடுபட்ட ரெட்டவயல் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கச் செயலா் க. சத்தியமூா்த்தி ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.