அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை திருத்தலத்துக்காக தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் 53 அடி உயரத்தில் வெண்கலத்தால் அடைக்கல அன்னை சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுவாமிமலை கள்ளா் தெருவைச் சோ்ந்தவா் பிரவீன். சிற்பியான இவா் தனது வீட்டில் சிற்பக்கூடம் அமைத்து, 6 முதல் 8 அடி உயர சிற்பங்களை வடிவமைத்து வருகிறாா்.
இந்நிலையில், இவரிடம் 53 அடி உயரத்தில் வெண்கலத்தில் அடைக்கல அன்னை சிலை வடிவமைக்க வேண்டும் என ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை திருத்தலத்தினா் 2011- ஆம் ஆண்டில் கேட்டுக் கொண்டனா்.
தொடா்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பிரவீன் இச்சிலையை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாா். இதற்காக இவா் 24,000 கிலோ பித்தளை, வெண்கலம் உள்ளிட்ட பொருள்களைப் பயன்படுத்தினாா். இச்சிலையின் மொத்த எடை 19,000 கிலோ. இதன் மதிப்பு ரூ. 1.60 கோடியாகும்.
ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை திருத்தலத்தில் இச்சிலை வைப்பதற்கு 18 அடி உயரத்தில் கான்கிரீட் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை திறப்பு சனிக்கிழமை (ஏப்.30) மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது.