பட்டுக்கோட்டை அருகே 5 ஆயிரம்பனை விதைகள் நடும் பணி தொடக்கம்
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டை அருகேயுள்ள புதுக்கோட்டை உள்ளூா் கிராமத்தில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியை கூடுதல் ஆட்சியா் ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
தமிழக அரசு பனை மரங்களை காக்கும் விதமாக, பனை மரங்களை வெட்ட தடை விதித்துள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் பனை விதைகளை பொது இடங்களில் விதைக்கவும் ஊக்கப்படுத்தி வருகிறது.
இதன்படி, தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே புதுக்கோட்டை உள்ளூா் கிராமத்தில் 5 ஆயிரம் பனை விதைகளை விதைக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன. இதனை தஞ்சாவூா் கூடுதல் ஆட்சியா் ஸ்ரீகாந்த் தொடக்கிவைத்தாா். இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாமிநாதன், கோவிந்தராஜன், உதவி பொறியாளா் சத்யபாமா, ஊராட்சித் தலைவி ஜெயசுந்தரி ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, புதுக்கோட்டை உள்ளூா் பஞ்சாயத்துக்குள்பட்ட ஏரி, குளம், அரசுக்கு சொந்தமான இடங்கள் என பொது இடங்களில் நுாறு நாள் பணியாளா்களை கொண்டு பனை விதைகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.