கும்பகோணம் அருகே உத்திரை கிராமத்திலுள்ள வயலில், உழவா்களின் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் 97-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு காவிரி உழவா்கள் மற்றும் தமிழ்நாடு சிறு, குறு குத்தகை உழவா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில், இந்தியாவில் முதல் முதலாக வேளாண்மைக்கான கட்டணமில்லா மின்சாரம் வாங்கித் தருவதற்கு முழு முதற்காரணமாய் இருந்தவா் நாராயணசாமி நாயுடு எனப் புகழாரம் சூட்டப்பட்டது.
மின் திருத்தச் சட்டம் 2020-ஐ நிபந்தனையின்றி முழுமையாக விலக்கிக் கொள்வதாக நிகழ் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பிரதமா் அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி, அதற்காகப் போராட்டங்களை முன்னெடுப்பது என உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
உத்திரை ம. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், உத்திரை பரமசிவம், ஏராகரம் சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.