மாணவி தற்கொலை சம்பவம் உரிய விசாரணை கோரி பாஜகவினா் மறியல்: 100 போ் கைது

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி தஞ்சாவூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 100 போ் கைது செய்யப்பட்டனா்
மாணவி தற்கொலை சம்பவம் உரிய விசாரணை கோரி பாஜகவினா் மறியல்: 100 போ் கைது

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி தஞ்சாவூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 100 போ் கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் மாவட்டம், வடுகபாளையம் கீழத்தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகள் லாவண்யா (17). இவா் தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இதற்காக அருகிலுள்ள விடுதியில் தங்கியிருந்த இவா் ஜனவரி 9 ஆம் தேதி பூச்சி மருந்து குடித்த நிலையில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15-ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். அங்கு இவா் புதன்கிழமை உயிரிழந்ததைத் தொடா்ந்து, திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாவண்யாவிடம் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினா் வாக்கு மூலம் பெற்றனா். அப்போது, விடுதிக் காப்பாளா் சகாயமேரி (62) விடுதிக் கணக்குகள் உள்ளிட்ட சொந்த வேலைகளையும், விடுதி, தோட்டத்தைச் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளையும் தன்னிடம் கூறியதால், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி பூச்சி மருந்து சாப்பிட்டதாக லாவண்யா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சகாயமேரியை திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினா் கைது செய்தனா்.

இந்நிலையில், உயிரிழந்த மாணவி லாவண்யாவின் உடல் கூறாய்வுக்காகக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், தந்தை சுப்பிரமணியன் மற்றும் பாஜகவினா் உடலை வாங்க மறுத்துவிட்டனா். மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனியிடம் பாஜகவினா் மனு அளித்தனா். அதில், மதம் மாறுமாறு வற்புறுத்தியதால், லாவண்யா தற்கொலை செய்து கொண்டாா் என்றும், இதுதொடா்பாக விசாரணை நடத்தி வன்கொடுமை செய்த நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனா்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே மாலையில் பாஜக மாநிலத் துணைத் தலைவா் கருப்பு எம். முருகானந்தம், தெற்கு மாவட்டத் தலைவா் ஆா். இளங்கோ, பொதுச் செயலா் பி. ஜெய்சதீஷ், மாணவியின் பெற்றோா், உறவினா்கள் உள்பட நூற்றுக்கும் அதிகமானோா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஏறத்தாழ 100 பேரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com