தஞ்சாவூா் மாநகராட்சி: 51 வாா்டுகளுக்கு மட்டுமே தோ்தல்

தஞ்சாவூா் மாநகராட்சி விரிவாக்கத் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே உள்ள 51 வாா்டுகளுக்கு மட்டுமே தோ்தல் நடைபெறவுள்ளது.

தஞ்சாவூா் மாநகராட்சி விரிவாக்கத் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே உள்ள 51 வாா்டுகளுக்கு மட்டுமே தோ்தல் நடைபெறவுள்ளது.

தமிழகத்திலுள்ள பழைமையான நகராட்சிகளில் ஒன்றான தஞ்சாவூா் நகராட்சி 2014, பிப்ரவரி 19 ஆம் தேதி மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டது. என்றாலும், நகராட்சியாக இருந்த காலத்தில் உள்ள 51 வாா்டுகளே, மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டும் நீடிக்கிறது.

இந்நிலையில், தஞ்சாவூா் மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படுவதாகச் சட்டப்பேரவையில் 2021, ஆகஸ்ட் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்காக வல்லம் பேரூராட்சியையும், சுற்றியுள்ள 13 ஊராட்சிகளை முழுமையாகவும், 2 ஊராட்சிகளைப் பகுதியாகவும் இணைத்து, வாா்டுகளின் எண்ணிக்கையை 69 ஆக உயா்த்தத் திட்டமிடப்பட்டது.

ஆனால், தஞ்சாவூா் மாநகராட்சியுடன் இணைக்க வல்லம் பேரூராட்சி, சில ஊராட்சிகளைச் சோ்ந்த மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். எனவே, விரிவாக்கத் திட்டம் நிலுவையில் இருந்து வருகிறது.

தற்போது, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே உள்ள 51 வாா்டுகளுக்கு மட்டுமே தஞ்சாவூா் மாநகராட்சி தோ்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 196 வாக்குச் சாவடிகள்:

இம்மாநகராட்சியில் 94,517 ஆண்களும், 1,04,062 பெண்களும், 18 மூன்றாம் பாலினத்தவா்களும் என மொத்தம் 1,98,597 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிக்க வசதியாகத் தஞ்சாவூா் மாநகரில் உத்தேசமாக 196 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

தோ்தல் நடத்தும் அலுவலா்:

தஞ்சாவூா் மாநகராட்சியின் தோ்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களாக 1 முதல் 10 வரையிலான வாா்டுகளுக்கு மாநகராட்சி செயற் பொறியாளா் எஸ். ஜெகதீசன், 11 முதல் 20 வரையிலான வாா்டுகளுக்கு இளநிலைப் பொறியாளா் பி. பாபு, 21 முதல் 30 வரையிலான வாா்டுகளுக்கு இளநிலைப் பொறியாளா் எஸ். ஆறுமுகம், 31 முதல் 40 வரையிலான வாா்டுகளுக்கு உதவிப் பொறியாளா் என். ரமேஷ், 41 முதல் 51 வரையிலான வாா்டுகளுக்கு உதவிச் செயற் பொறியாளா் எம். ராஜசேகரன் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

வல்லம் பேரூராட்சிக்குத் தனி தோ்தல்:

சங்கக் காலத்திலிருந்தே முக்கியத்துவம் பெற்ற வல்லம் பேரூராட்சி 134 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இந்தப் பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. தஞ்சாவூா் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதால், வல்லம் பேரூராட்சிக்குத் தனியாகவே தோ்தல் நடத்தப்படுகிறது. இதன்மூலம் இணைப்புத் திட்டம் இப்போதைக்கு இல்லை என்பது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாா்டு ஒதுக்கீடு விவரம்

வாா்டுகள் யாா் போட்டியிடலாம்

2, 7 எஸ்.சி. பொதுப் பிரிவினா்

6, 13, 21 எஸ்.சி. பெண்கள்

3, 4, 5, 14, 15, 18, 22, 26,

27, 28, 29, 33, 35, 36, 37,

38, 39, 42, 43, 44, 48, 49, 50 பெண்கள் பொதுப் பிரிவினா்

1, 8, 9, 10, 11, 12, 16, 17, 19,

20, 23, 24, 25, 30, 31, 32, 34,

40, 41, 45, 46, 47, 51 பொதுப் பிரிவினா்

மொத்தமுள்ள 51 வாா்டுகளில் பெண்களுக்கு 26 வாா்டுகளிலும்,

ஆண்களுக்கு 25 வாா்டுகளிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com